Saturday, June 28, 2014

கொஞ்சம் பொறுத்திருக்கலாம்!!!

"என்கூட வா நான் சொல்றன்..." தன் ஐந்து விரலால் என் சுட்டுவிரல் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

"எங்க கூட்டிப்போற?? அம்மா தேடுவாங்க... இங்கயே சொல்லன்.." கெஞ்சிக்கொண்டே அவள் இழுவையில் பின் தொடர்ந்தேன்.

"வீட்ல வச்சி சொல்ற விஷயமில்ல இது.. உன் எதிர்காலமே மாறப்போகுது.. சத்தம் போடாம வா" இழுவையில் வேகம் கூடியது.

அழகான புற்றரை, வயல் வெளி கடந்து போனோம். போனது நான் அவள் என்ற இருவர் அல்ல. அவளோடு கலந்து நான் இல்லாமல் போக அவள் மட்டும்தான்.

"உனக்கு என்ன பிடிச்சிருக்கா??" வழியில் இடைநிறுத்தி கேட்டாள்.

"ம்ம்.. ஆனா நீ யாரு?? எதுக்காக என்கிட்ட இதெல்லாம் கேக்குற??" செய்வதறியாது கேட்டேன்.

ஒரு வெட்ட வெளிக்குப் போய் சேர்ந்தோம். பனிமூட்டமாய் இருந்தது. கோள்கள் எல்லாம் தலைக்கு மேல் சுற்றியது. பெரிய சைஸ் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. வெள்ளை உடையாய் அவள் உடையும் மேலாடை நீங்கி என்னுடலும் காட்சி தந்தது.  

"கண்ண மூடு சொல்றன்.." என்றதும் நான் கண்ணை மூட நெஞ்சில் கை வைத்தாள். வானிலிருந்து இரண்டு துளிகள் கண்ணில் வீழ்ந்தன. கண்ணை லேசாக திறந்து பார்த்தேன்.

அருகில் அம்மா சிவப்பு நிற வாளியுடன்.

"கொஞ்சம் பொறுத்திருக்கலாம்" என்றது உள் மனது.

Saturday, June 7, 2014

நான் வேசி தான்..



முகத்தில் சிரித்து
அகத்தில் அழுதும்
எட்டி அறைய மனம் துடிக்க
தட்டு தடவி உறவு கொண்டு
சுட்டுவிடும் விளக்கையும்
எட்ட நினைக்கும்
விட்டில் பூச்சியாய் வாழ்கிறேனே
நான் வேசிதான்...

வீட்டில் பிள்ளை
கோவிலில் பக்தன்
பாரில் குடிகாரன்
தெருவில் அய்யோக்கியன்
அவரவர் மனம் ஏற்றார்ப்போல் தினம்
என்னை மறைத்து வாழ்கிறேனே
நான் வேசிதான்...

அவள் துரோகி
இவன் துரோகி
நண்பனென்று எவனுமில்லை
அல்லல் முழுதும் என்னில் தான்
எனக்கென்று நான் வகுத்த
காமப்பசியை
பலரில் சாட்டி இன்பம் கண்ட
நான் வேசிதான்...

காசுக்காய் மலர்ந்தும்
காய்ச்சலிலும் ஓடியும்
பகட்டுக்காய் பரிணமித்தும்
ஏட்டுக்காய் ருசி ருசித்தும்
முதலாளிமார் இன்பம் காண
வியர்வை சிந்தி அசந்தேனே
நான் வேசிதான்...

தாய் பிரிந்து
பெற்ற சேய் பிரிந்து
நாடு பிரிந்து நண்பர் பிரிந்து
உற்ற உறவுகள் தான் பிரிந்து
கூடுவிட்டு கூடு பாய்ந்து
சில்லறைக்காய் ரெக்கை கட்டிய
நான் வேசிதான்...

வேசிக்கு பால் வராதாம்
ஆணென்ன பெண்ணென்ன
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும்
அத்தனை ஜீவனுமே
வேசிகள் தான்!!!

Tuesday, June 3, 2014

இது போதும் எனக்கு...

மூன்று மணிநேரம் பயணம். மொபைலில் இளையராஜா பாடல்களை பதிவேற்றிக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். மொபைல் சார்ஜ்க்கு வேலையில்லாமல் பஸ்ஸிலும் ராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் பாடல் ஒலித்தால் சாதா பயணம் கூட சொகுசுப்பயணம் தான். திடீரென்று பக்கத்து சீட்டை திரும்பி பார்த்தேன். அங்கே சஹானா.

"ஏய் சஹானா... எந்திரி..." எழுப்பினேன். எழுந்து பார்த்தவள்

"டேய் ரிமா... நீயா?? என்டா இத்தன நாளா என்ன தேடி வரல்ல?? மறந்துட்டியா??" என்றாள். 

"என்ன டி உளர்ற?? நான் உன்ன மறப்பேனா?? நீ செத்து போயிட்டதா எல்லாரும் சொன்னாங்களே" கண் கலங்கிவிட்டேன்.

"என்னது நான் செத்துட்டேனா?? உன்ன விட்டு எங்க டா போவேன்?? நம்மள பிரிக்கிறதுக்கு யாரோ உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க" என்றவள் என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். 

அவளில்லாத நாட்களில் நடந்த அத்தனையையும் சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் நின்ற பஸ்ஸில் ஒருவர் ஏறிய போது கண்டக்டர் என்னை பார்த்து சொன்னார் 

"தம்பி தள்ளி உக்காருப்பா.. ஒருத்தருக்கு ரெண்டு சீட்டுன்னா எப்படி மத்த ஆக்கள் உக்கார்றது??"  

#பேயோ பிரம்மையோ... இழந்த சஹானாவை மீண்டும் பார்த்தாயிற்று. 

Friday, May 30, 2014

விஞ்ஞான காதல்...

இதோ.. தனிமையில்
சடத்துவ வாயுவாய் நான் மட்டும்....

முதல் பார்வை
அடிப்படை சுரமாய்
நெஞ்சில் பிரதிபலிக்க..
அவள் எண்ண அலைகள் மட்டும்
என் காதலை காலிக் கொண்டிருந்தன திருசியமாய்...

கதோட்டு கதிராயும்
நேர்கோடாயும் இருந்த நெஞ்சை
வலஞ்சுளியாய் திருப்பம் எடுத்தாள் பாவி...
முழு வட்டமாய் நெஞ்சம் மையமாய் தஞ்சம்...
ஆக தொடலியாய் என்
பறிபோன சுதந்திரம்....

விசுறு பம்பியாய்
கண்கள் காண
நெஞ்சத் தளவாடியில் அவளின் 1000 விம்பங்கள்..

முடிவிலியில் தேட
காணவில்லை தேவியவள் தெய்வ முகம்!!
ஓ...
கொஞ்சம் கொஞ்சம் உறிஞ்சிக் கொண்டதோ
நெஞ்சத் தளவாடி...

மூடிய பொருளில்
சடத்துவ திருப்பமாய்
அவளை மட்டும்
கொண்ட நெஞ்சம்..
அவள் u.v பார்வையில்
ஒபிற்றலாய்
வளைத்தெடுக்கப்பட்டது!!!
விதி கண்ட வலியிலும் சுகம் காண்கின்றேன்..
விளைபொருளுக்காய்..

என் கண்ணில்
நீரை இடம்பெயர்க்க...
அழகிய நெஞ்சை கீறுகிறாள்
சுரமானியாய்.....
ஆக
அவள்முன் எளிய ஊசலாய் நான்!!

அவள்
தயாரிப்பாளர்
தமிழில் தந்தையாம்...
பொருத்தம் பார்த்த பின்
எடுகோள் முன்வைக்கிறார்
திருமணத்திற்கு
காதல் நிபந்தனையில் தாக்கம் இல்லையாம்....

உன் பின்னால்
அலைவு நிகழ்த்தியத்தும்
உனக்காய்
என்னை செப்பம் செய்ததும்
இன்று
வெறும் வேடிக்கையாய்
எனக்கு!!!!

இன்று
காரணிப்படுத்த
அன்றயதும்
இன்றயதும்
தேறிய விளைவு
பூச்சியம் தான்...
சமப்படுத்தாத தாக்கமாய்
என்

"காதல்"

Thursday, May 29, 2014

இவளும்...

இதுவும் ஒரு காதல் கவிதை தான்....
எனக்கு பதினாறு..
அவள் வயதை கேட்கவில்லை நான்
பதினாறை மிஞ்சிடுமோ - என்ற 
பயமாக கூட இருக்கலாம்...!!!

மாலை வகுப்பு..
சார் ஐ வற்புறுத்தி வைத்து கொண்டது...
மஞ்சளா நீலமா,
சட்டையில் பட்டிமன்றம்...
கண்ணாடி முன்னின்று
சீவிய தலை கோதி விட்டு...
அப்பா பாக்கெட்..
எதனை நூறுகள் இருந்தாலும்
ஐம்பதை காவிக்கொண்டு..
வகுப்பு விஜயம்!!!

வருவாள்..
இரட்டை ஜடை கூந்தல்,
கீழ் விட்டு மேலிழுத்த துப்பட்டா..
மூக்கை விட பெரிய மூக்குத்தி..
அவளுக்கென்றே பிரம்மன் செய்த இரு...

கண்கள்...

பாடத்தை மறக்கடிக்கும் சிரித்த வதனம்..
தொண்ணூறு பாகையில் தோழியருடன் அரட்டை..
வலிக்காமல் சீவுவாள் பென்சிலை...

அவளங்கு வந்தபின்..
அவள் அறியாது அவளை நோக்க வேண்டும்..
அதுதான் அன்றைய நாட்களில்
எனக்கும் எனக்கும் ஒப்பந்தம்...

மூன்று மணிநேரம் தடையின்றிய
தேவாமிர்தம்..
முடிவிற்கு வரும்..
நெஞ்சுக்குள் மணியோசை கேட்கும்..
அதைதான் வகுப்பு முடிவு சமிக்ஞை
என்பான் நண்பன்....

சைக்கிளில் வருவார் அப்பா...
ஏறியமர்ந்து திரும்பிப்பார்ப்பாள்... 
ஏதுமறியாது எச்சில் விழுங்குவேன்..
அது மட்டும் தான் ஞாபகம்..

பொது பரீட்சை முடிய
காணவில்லை தேவி முகம்..
நிமிடங்கள் வருடங்களானது..
வீடு வெறிச்சோடியது...

கொண்ட காதலை
கூறவில்லை ஒருபோதும்..
வேதனையில் மனம் கனகனத்தது...
கண்ணீர் கண்களை முட்டியது...

மீண்டும் ஒருத்தி..
எடையிலும் நடையிலும் உடையிலும்
அவளைவிடவும் தூள்.. 

" மச்சான்.. யாரு டா இவ??? "
அருகிலிருந்த  நண்பனை கேட்டேன்...

"மச்சான் அப்போ அவ???"

"விடு மச்சான்.. அவ கேரக்டர் மோசம் டா.. கழட்டிவிட்டுட்டேன்... "

#கண்ணால் பார்த்து பலபேரை கழட்டி விட்டவர்களில் நானும் ஒருவன்..

சீதனம்!!!

பெரிய படிப்பில்லை...
காரில்லை...
அவ்வளவாய் அழகில்லை... 
பெரிய வீட்டு மருமகனாகும்
தகுதியுமில்லை!!!

ஒரு 100CC சைக்கிள் தான்...
மாதம் 25 உழைப்பு...
கடன் கழிய சுளையாய் 15 மிஞ்சும்...
கணக்குப்போட்டு வாழும்
மிடில் கிளாஸ் நான்!!!

அவன் இருந்தான்
இஞ்சினியர்...
உழைப்பு லட்சங்களில்...
அரவிந்த் சாமி கலரு 
கருப்பு கொரொல்லா காரு!!!

அவர்கள் எனக்காய் 
காத்திருக்கவில்லை...
அவனையே எதிர்பார்த்தார்கள்... 
நான் காணாத அவன் 
கொண்டவைகளின் பெறுமதி 
அவர்களுக்கு தெரியும்...
பெண்ணோடு ஒரு தொகையும் கொடுத்தார்கள் அவனுக்கு!!!

சமூகம் என்னையும் 
அவனையும் ஒப்பிட்டது.. 
அவன் சீதனம் வாங்கிய கயவன்
என்று பெயரும் சூட்டியது!!! 

ஒன்று மட்டும் உண்மை...
சீதனம் தவிர் என்றால் 
ஆண்கள் அழகை பொருளாய் பார்த்திருப்பர்...
சுமாரான நங்கையரெல்லாம்
கன்னியாய் காலம் தள்ளியிருப்பர்!!! 

கோச்சடையான் விமர்சனம்...



நானும் நண்பனும் போய் தியேட்டர்ல உக்கார்ந்தோம். பொதுவாவே தலைவர் படம்னா கேக்கவா வேணும்?? அதே கூட்டம். அதே ஆரவாரம். ரஜினி படங்கள தொடர்ந்து பாக்குறதால அது பெரிய ஒரு ஆச்சர்யமா ரெண்டு பேருக்குமே படல. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆச்சு. நண்பன் கிட்ட கேட்டன்

"என்ன டா இது?? சின்ன பசங்க கார்ட்டூன் மாதிரி இருக்கு.. தலைவர எதிர்பார்த்து வந்தது வேஸ்ட் டா.." அதுக்கு நண்பன் சொன்னான்

"மச்சான்.. தமிழ் சினிமாவுக்கு இந்த அனிமேஷன் புதுசு. நமக்கு பழக்கம் இல்ல. இது ஒரு அனிமேஷன் படம். அத முதல்ல நல்லா புரிஞ்சிக்கணும். ஒரு படையப்பாவையோ சந்திரமுகியையோ இங்க எதிர்பாக்க கூடாது"

"அட ஆமால்ல.. தலைவர் தலைவர் தான் டா.. என்னா ஸ்டைலு.. ஒன்னு கவனிச்சியா நாசர், சரத் குமார், நாகேஷ் எல்லா கதாப்பாதிரமும் செம்மையா பொருந்திருக்குல்ல.." ஆச்சர்யமா சொன்னன் நண்பன்கிட்ட..

"புலிக்கு பொறந்தது பூனையாகுமா டா?? தலைவர் மகள் எடுத்த படம். எல்லாமே பர்பெக்டா தானே இருக்கணும்.." நண்பன் சொன்னான்.

"இருந்தாலும் மச்சான் அனிமேஷன் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்கலாம்" அங்கலாய்த்தேன் நான்.

"ஆமா டா. எனக்கும் தோணிச்சு.. ஆனா இது ஆரம்பம் தானே மச்சி.. முதல் தடவைக்கு இது ரொம்ப அதிகம் டா.." நண்பன் விட்டுக்கொடுக்காம பேசினான்.. தொடர்ந்தும் நண்பன் சொன்னான்

"ஒவ்வொரு சீனுமே சொல்லப்பட்டிருக்க விதம் நல்லாருக்குல்ல மச்சான்?? என்ன பிரமாண்டம்.. அப்பப்பப்பா.." அவனின் வியப்பு கண்கள்ல தெரிஞ்சுது.

"என்ன டா வந்ததுலருந்து பாக்குறன்.. நம்ம ஒஸ்கார் நாயகன பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீ??" நான் நண்பன்கிட்ட கேட்டேன்..

"நான் என்னத்த டா சொல்ல?? மனுசனா அவன்?? இங்க பொறக்க வேண்டியவனே இல்ல டா.. நமக்கு கிடைச்ச பொக்கிஷம் அந்த ஆளு.. பாட்டென்ன.. Background Score என்ன?? சான்சே இல்ல டா"

"அதுவும் சரிதான்.."
நான் சொல்ல படமும் முடிவுக்கு வந்திச்சு. நண்பன் பேசதொடங்கினான்.

"என்னா கத என்னா இயக்கம்.. என்னா இசை.. ரஜினி ரசிகன் கண்டிப்பா பாக்கவேண்டிய படம் இல்லையா மச்சான்??" அதுக்கு நான்

"அதென்னமோ உண்மை தான்.. உனக்கு படத்துல எந்த குறையுமே இல்லையா??" கேட்டன்.

"ஏன் இல்லாம??? இந்த கதைய தலைவர் அனிமேஷன் இல்லாம நடிச்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்.." நண்பன் ஆவலோட சொன்னான்.

-Rimaz-

#விமர்சனம் என்ற பெயரில் கதை சொல்லி தயாரிப்பாளரை நஷ்டப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.