Tuesday, June 3, 2014

இது போதும் எனக்கு...

மூன்று மணிநேரம் பயணம். மொபைலில் இளையராஜா பாடல்களை பதிவேற்றிக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். மொபைல் சார்ஜ்க்கு வேலையில்லாமல் பஸ்ஸிலும் ராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் பாடல் ஒலித்தால் சாதா பயணம் கூட சொகுசுப்பயணம் தான். திடீரென்று பக்கத்து சீட்டை திரும்பி பார்த்தேன். அங்கே சஹானா.

"ஏய் சஹானா... எந்திரி..." எழுப்பினேன். எழுந்து பார்த்தவள்

"டேய் ரிமா... நீயா?? என்டா இத்தன நாளா என்ன தேடி வரல்ல?? மறந்துட்டியா??" என்றாள். 

"என்ன டி உளர்ற?? நான் உன்ன மறப்பேனா?? நீ செத்து போயிட்டதா எல்லாரும் சொன்னாங்களே" கண் கலங்கிவிட்டேன்.

"என்னது நான் செத்துட்டேனா?? உன்ன விட்டு எங்க டா போவேன்?? நம்மள பிரிக்கிறதுக்கு யாரோ உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க" என்றவள் என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். 

அவளில்லாத நாட்களில் நடந்த அத்தனையையும் சொல்லிக்கொண்டிருந்தேன். இடையில் நின்ற பஸ்ஸில் ஒருவர் ஏறிய போது கண்டக்டர் என்னை பார்த்து சொன்னார் 

"தம்பி தள்ளி உக்காருப்பா.. ஒருத்தருக்கு ரெண்டு சீட்டுன்னா எப்படி மத்த ஆக்கள் உக்கார்றது??"  

#பேயோ பிரம்மையோ... இழந்த சஹானாவை மீண்டும் பார்த்தாயிற்று. 

No comments:

Post a Comment